தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும் நோய்த்தொற்றை அவதானத்தில் கொண்டும் நாங்கள் ஒன்று கூடி நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தி விடாது பொங்கல் விழாவை அமைதியான முறையில் சிறப்பாக கொண்டாடுவோம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் அபாயம் தொடர்பாக உச்ச அளவான அச்ச நிலைமையொன்று நிலவுகின்ற சூழலில் தமிழர்களின் பண்பாட்டு விழாவான தைப்பொங்கல் விழாவினை நாங்கள் இன்று கொண்டாடுகின்றோம்.
தைப்பொங்கல் விழாவானது மக்கள் மத்தியில் நல்ல சுகாதார, பாதுகாப்பான சுபீட்சமான ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பக்கூடிய ஒரு சூழ் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று வாழ்த்தி நிற்கின்றேன்.
தமிழ் மக்கள் நன்றி உள்ள மக்கள் என்பதனை காட்டக்கூடிய வகையில் இயற்கைக்கும், உழவர்களுக்கும் நன்றி கூறுகின்ற ஒரு விழாவாக தைப்பொங்கல் விழா காணப்படுகின்றது.
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பாரம்பரியமான நம்பிக்கை.
எனவே தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும் நோய்த்தொற்றை அவதானத்தில் கொண்டும் நாங்கள் ஒன்று கூடி நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தி விடாது பொங்கல் விழாவை அமைதியான முறையில் சிறப்பாக கொண்டாடுவோம்.
மலர்கின்ற புதிய தைத்திருநாள் உலகம் முழுவதற்கும் புதிய நம்பிக்கையையும், பலத்தையும் தரவேண்டும். நோயற்ற சௌபாக்யமான வாழ்வினைப் பரிசளிக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.
இந்த நல்ல நாளில் உலகத்திற்கு உணவளிக்க பாடுபடுகின்ற உழவர்களுக்கும் நன்றியுடன் கூடிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றேன்.என தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்